தமிழகத்தில் எல்லா நாட்களிலும் வழிபட அனுமதி அளிக்கப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் - கொரோனா தளர்வுகளுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு
Oct 15 2021 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி அளித்ததை தொடர்ந்து பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து வழிபாட்டு தலங்களும், திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலின் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குறைந்த அளவே பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து நாட்களும் கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன. நாகூர் தர்கா அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டதை தொடர்ந்து, காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதைப்போல வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கடற்கரைச் சாலை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.