விஜயதசமி நாளையையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கும் வைபவம் - குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Oct 15 2021 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜயதசமி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி கற்பித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்று, தங்கள் குழந்தைகளை அரிசியில் அகரம் எழுத வைத்து, எழுத்தறிவை தொடங்கி வைத்தனர்.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். குழந்தைகளின் நாவில், முதல் எழுத்தை எழுதிய பின்னர், தட்டில் நிரப்பப்பட்ட அரிசியில், உயிரெழுத்துகளில் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத பழக்கி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறியவை தொடங்கி வைத்தனர்.
கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில், காலை 5 மணி முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் ஸ்ரீமகா சரஸ்வதி அம்மன் ஆலயத்தில், கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர்கள், சரஸ்வதியை வணங்கி, வழிபட்டு, குழந்தைகளுக்கு கல்வியறிவை தொடங்கி வைத்தனர்.
நெல்லை டவுனில் உள்ள சரஸ்வதி கோயிலுக்கு, ஏராளமான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அங்கு, பச்சரிசி மற்றும் மஞ்சள் நிரப்பப்பட்ட தட்டில், குழந்தைகளை எழுத வைத்து, எழுத்தறிவை போதித்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலிலும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.