புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவை
Sep 21 2021 9:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பௌர்ணமி தினத்தையொட்டி கருட வாகன சேவை நடைபெற்றது.
பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புரட்டாசி பௌர்ணமி தினமான நேற்று இரவு ஏழுமலையானின் கருட வாகன சேவை கோவில் மாட வீதியில் நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி கருட சேவையை முன்னிட்டு சர்வ திரு ஆபரணங்கள் தரித்து கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து வாகன மண்டபத்தில் தங்க கருட வாகனம் மீது எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு தூப, தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருடவாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது.
இதேப்போல சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞானகந்தசாமி திருக்கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பௌர்ணமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், தீர்த்த பவுர்ணமி பூஜை நடைபெற்றது திரளான பெண்கள் பங்கேற்று, பவுர்ணமி நிலவுக்கும், கடலுக்கும் பூஜைகள் செய்தனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்த பெண்கள், இதில் கலந்துகொண்டு, கடல் மற்றும் பௌர்ணமி நிலவைப் பார்த்து வணங்கி, பூஜைகள் செய்தனர். மாதா-பிதா-குரு ஆசி வேண்டியும், குலதேவதை-இஷ்ட தேவதை-கிராம தேவதைகளை வேண்டியும், நெய்தீபம் ஏற்றி வணங்கினர்.