சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு - கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பக்தர்களுக்கு மட்டும் அனுமதி
Jul 16 2021 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பக்தர்கள் அவசியம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆடி மாத பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்களைக் கொண்டு வராத பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.