மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா - கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்
Apr 15 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியால், இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடி மரத்தில் பிரம்மாண்டமான மாலை ஏற்றப்பட்டு, பூஜிக்கப்பட்ட நீரால் கொடி கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர், பிரியா விடையுடன் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 22-ம் தேதி பட்டாபிஷேகமும், 23-ம் தேதி திக்விஜயமும், 24-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 25-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளன. கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாக, விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள், கோயில் நுழைவாயில் முன்பாக நின்றபடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரையில் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவை காண முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.