மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் - தடையை நீக்கி அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
Apr 12 2021 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க கோரி மதுரையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகம விதிப்படி நடத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் கோயில்களில் திருவிழா, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மக்களின் நம்பிக்கையான திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.