பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஜனவரி 27-ல் திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்
Jan 22 2021 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜனவரி 27-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், 28-ம் தேதி தைப்பூச திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்பெருமை மிக்க தைப்பூச திருவிழா, பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் காலை 7 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் ஆகியன நடத்தப்பட்டு, அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி கொடிமண்டபத்தில் எழுந்தருளினார். 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு நாள்தோறும் அருள்மிகு முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக காலை மாலை வேலைகளில் தந்தப்பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கமயில், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரதவீதிகளில் உலா வருவார். ஜனவரி 27-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், ஜனவரி 28-ம் தேதி தைப்பூச திருத்தேரோட்டமும் நடைபெறும். நிறைவு நாளான ஜனவரி 31-ம் தேதி தெப்ப தேரோட்டத்தை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்படும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், கொடியேற்ற நிகழ்ச்சியில் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.