பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
Jan 14 2021 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தைத்திருநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில், அதிகாலைமுதல் குடும்பத்துடன் பலர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா முற்றிலும் நீங்கி மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் பழமைவாய்ந்த சிவன் கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தைத் திருநாளை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகள் புத்தாடை அணிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மயூரநாதசுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் அளித்த 108 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்தின் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விவசாயிகள் நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்ததாக கூறினர்.