கொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது
Mar 19 2020 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, திருப்பதி மலையில் உள்ள சுவாமி புஷ்கரணி திருக்குளம் மூடப்பட்டதோடு கட்டண சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் நடத்தப்படும் வாராந்திர சேவைகளை ஏற்கனவே ரத்து செய்த தேவஸ்தான நிர்வாகம், தினசரி நடத்தப்படும் நித்திய சேவைகளான கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மூத்த குடிமக்களுக்கான தரிசனம், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவற்றையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள சுவாமி புஷ்கரணி கோவில் திருக்குளம் மூடப்பட்டது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தெர்மோ மீட்டர் மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சோதனையில் 37 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக உடல் வெப்பம் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிறகு அரசு மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் பக்தர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படுகின்றன. கோயில் வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர் திருவிழா வரும் 9ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது.