கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வழிபாட்டு தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - திருச்செந்தூர் கோயில் வளாகம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிப்பு
Mar 16 2020 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் கூடும் இடங்களில் நோய்த் தடுப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவிலில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. கோவிலில் உள்ள சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைரஸ் தடுப்பு பதாகை வைக்கப்பட்டு கொரோனா அறிகுறிக்கான சளி, இருமல் காய்ச்சலை கட்டுப்படுத்திட மருத்துவக்குழு மூலம் இயற்கை மூலிகை மருந்துகள் வழங்கப்படுகின்றன. கோவில் பிரகாரங்களிலும் , பக்தர்களின் தரிசன வரிசைகளிலும், பக்தர்கள் கை வைக்கக்கூடிய இடங்களிலும் கோவில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு நோய்த்தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றன. ஒலிப்பெருக்கி மூலம் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.