பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் : தெப்பத் தேர் உலா
Feb 12 2020 9:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, தெப்பத் தேர் உலா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், திருத்தேரோட்டம் நடைபெற்றன. நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரியநாயகியம்மன் கோயில் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உலா நடைபெற்றது. தெப்பத்தின் நடுவிலுள்ள கல்மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து சோடஷ உபச்சாரம் செய்யப்பட்டது. நகைகள், பட்டைடைகள், வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் ஏற்றம் செய்யப்பட்ட சுவாமி அதிர்வேட்டு முழங்க, வாணவேடிக்கை பின்னணியில் தெப்பத்தில் உலா எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்றிரவு 11 மணியளவில் திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.