ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கடந்த ஒரு மாதகாலமாக நோன்பை கடைபிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், நோன்பு முடிந்து இன்று ஈகைத்திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்தபின், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தொழுகை முடித்த பின்பு, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தேனாம்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தங்கள் சமூகத்திற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கு, இஸ்லாமியர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருச்சி சையது முர்துஷா மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியே நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீனாட்சிபுரம் கோட்டாறு, இளங்கடை, திட்டுவிளை, தக்கலை, தேங்காய்பட்டணம், திருவிதாங்கோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல், விழுப்புரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.