ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழா - தங்க பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Jul 24 2014 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் கடந்த 21-ம் தேதி ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, நாள்தோறும் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் மூன்றாம் நாளில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் உள்ளூர் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் 5வது படை வீடான திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களிலும் சிறப்பு அபிஷகமும், ஆராதனையும் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று சரவணப் பொய்கையில் உற்சவ மூர்த்திகளான முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி ஏழு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திருத்தணி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோரும் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
நாகை மாவட்டம் சிக்கல் அருகே பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் ஆலயத்தில் கடந்த 17-ம் தேதி ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் வைபவம் நடைபெற்றது. மகாபாரதத்தில் யுத்த காண்டத்தில் விவரிக்கப்படும் திரௌபதி கூந்தல் முடிதல் மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சிகளை கண்முன் கொண்டு வரும் வகையில் பக்தர்கள் வேடமணிந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி ஆலயத்தில் 150 ஆண்டு கால திருத்தேர் சிதிலமடைந்ததையடுத்து, பக்தர்களின் வேண்டுகோளினை ஏற்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைக்குப் பின்னர் திருத்தேரில் செங்கமலத்தாயார் எழுந்தருள, பக்தர்கள் ஏராளமானோர் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு பிரகாரங்களிலும் வலம் வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது.