புனித வெள்ளியை முன்னிட்டு தலைநகர் டெல்லி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை, புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி, டெல்லியில் உள்ள கதிட்ரல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலத்தில், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சி, இயேசுபிரானின் பாதம் கழுவும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்ற நிலையில், பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிக்ஸ் அடிகளார் பங்கேற்று, முதியோர்களின் பாதங்களை கழுவினார். புனித வெள்ளியையொட்டி இன்று அனைத்து தேவாலயங்களிலும் மும்மணிநேர ஆராதனை நடைபெறுகிறது.
திருச்சி பாலக்கரை வியாகுல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மேலும், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட துறையூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பெரம்பலூர் பனிமயமாதா ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறத்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கருங்கல், துண்டத்துவளை புனித அந்தோணியார் ஆலயத்தில், சிலுவை பாதை நிகழ்ச்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் ஏசு சிலுவையுடன் சுமந்து செல்லும் காட்சியுடன் சிலுவைப்பாதை ஊர்வலமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், புனிதவெள்ளியையொட்டி கிறித்தவர்கள் சிலுவைப்பாதை சென்றனர். இதையடுத்து நடைபெற்ற சிறப்பு ஜெபத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள தூய இதய ஆண்டவர் பசிலிக்காவில் நடைபெற்ற சிலுவைப் பாதையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.