விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாள் வழிபாடு முடிந்து பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன
Sep 2 2014 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட 175 விநாயகர் சிலைகள் 3 நாள் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு நேற்று ஊர்வலமாக, மேளதாளம் முழங்க காவேரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 192 விநாயகர் சிலைகள் 3-ம் நாள் சிறப்பு பூஜைக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெரிய நாயகி அம்மன் திருக்கோவில் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. இதேபோல், சண்முக நதியிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள அண்டர்காட்டில் அருள்பாலித்து வரும் திரெளபதிஅம்மன் ஆலயத்தில், ஆண்டுத்திருவிழாவையாட்டி தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில், உள்ளூர்மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், சொக்கனாதபுரத்தில் உள்ள கத்தப்பட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமபக்தர் ஆஞ்சநேயர் ஆலயத்தில், திருப்பணிகள் முடிவடைந்து, குடமுழக்கு விழா நடைபெற்றது. இதனையொட்டி, யாக குண்டத்தில் ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கலசங்களில் வேதவிற்பனர்கள் திருமந்திரம் முழங்க அபிஷேகம் செய்யப்பட்டதுடன், சிறப்பு ஆராதனையும் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.