விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
May 20 2022 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், அவரை கைது செய்ய நிபந்தனை விதித்துள்ளது.
சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப.சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமன் கைது செய்யப்பட்டார். அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக முன் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவரை கைது செய்ய நிபந்தனை விதித்தது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டுமானால், அவருக்கு மூன்று தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென தெரிவித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், இந்தியா திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.