இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எழுந்த புகாருக்கு பங்களாதேஷ் மறுப்பு - இந்தியாவுக்குள் நடைபெறும் மத பிரச்சினைகளுக்கு முதலில் முடிவு காணுமாறும் அறிவுறுத்தல்
Dec 12 2019 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் பாதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்களை அந்நாட்டு அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா, பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களது மத நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அவரது இந்த குற்றச்சாட்டை, பங்களாதேஷ் முற்றிலும் மறுத்துள்ளது. அந்நாட்டில் வெளியாகும் "Dhaka Tribune" என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.அப்தும் மெமென், பங்களாதேஷ் இந்துக்கள் குறித்த அமித்ஷாவின் கருத்து முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். உலகில் மத நல்லிணக்கத்தை பேணும் நாடுகளில் பங்களாதேஷும் ஒன்று எனத் தெரிவித்த அவர், தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் என யாரும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அமித்ஷா பங்களாதேஷில் சில காலம் தங்கியிருந்தால், இங்குள்ள மத நல்லிணக்கத்தை அவரால் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அப்தும் மெமென் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்துகளை ஆய்வு செய்த பின், இந்திய அரசின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்துச் செல்வோம் எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் வகையில், இந்தியா நடந்துகொள்ளாது எனத் தான் நம்புவதாகவும், அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.