பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் விரும்பினார் - மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பரபரப்பு தகவல்
Dec 8 2019 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டபோது, பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.சரத்பவார் விரும்பியதாகவும், ஆனால் இதனை அவர் மறைத்துவிட்டதாகவும் பாரதிய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திரு.தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திரு.பட்னவிஸ் பேட்டியளிக்கையில், கடந்த மாதம் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்பாக, திரு.சரத்பவாரின் சகோதரர் மகன் திரு.அஜித்பவார் தங்களை அணுகி, தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புவதாக தெரிவித்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரையும் தன்னுடன் பேச வைத்ததாகவும் திரு.பட்னவிஸ் குறிப்பிட்டார். ஆட்சி அமைப்பதில் ஒருமாத காலம் இழுபறி ஏற்பட்டபோதிலும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கவோ அல்லது எதிர்கட்சியை பிளவுபடுத்தவோ பாரதிய ஜனதா முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்தில் திரு.சரத்பவார் அளித்த பேட்டியில், கடந்த மாதம் 20ம் தேதி பிரதமரை தாம் சந்தித்து பேசியபோது பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் என்றும், அதனை தாம் ஏற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு திரு.பட்னவிஸ் பதிலளிக்கையில், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்து பேசியதில் பாதியை மட்டுமே திரு.பவார் தெரிவித்ததாகவும், மீதியை அவர் மறைத்துவிட்டதாகவும், அந்த மீதி என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார்.