ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவு - வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை
Dec 8 2019 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலில், 64 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல், வரும் 23-ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.,வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி, சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், 64 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நேற்று, கிழக்கு ஜாம்ஷெட்பூர், மேற்கு ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில், 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
17 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.