குற்றவாளிகள் தப்பியோட முயன்றபோது என்கவுண்டர் செய்தோம் - தெலங்கானா காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்
Dec 6 2019 9:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சைபராபாத் காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார், சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
தெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க, அம்மாநில அரசு சார்பாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். சைபராபாத் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து, காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த, குற்றவாளிகள், சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்டதாகவும், 10 காவலர்கள் உடன் சென்றதாகவும் தெரிவித்தார். காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறினார். இதில், காவலர்கள் இருவர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கைபேசி கண்டெடுக்கப்பட்டதுடன், தடயவியல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக சஜ்ஜனார் தெரிவித்தார். சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக கூறிய அவர், இது குறித்து, எந்த ஆணையத்திடமும் விளக்கம் அளிக்க தயார் என தெரிவித்தார். இதனிடையே, என்கவுண்டர் தொடர்பாக, தெலங்கானா மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.