தெலங்கானா என்கவுண்டர் விவகாரத்தில் சைபராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாருக்கு குவியும் பாராட்டுகள்
Dec 6 2019 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா என்கவுண்டர் விவகாரத்தில் சைபராபாத் காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அம்மாநிலம் முழுவதும் அவர் தற்போது ஒரு கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு, வாரங்கல் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அப்போது வாரங்கல் எஸ்.பியாக இருந்தவர்தான் திரு. வி.சி.சஜ்ஜனார். இரண்டு மாணவிகளின் முகத்தில் ஆசிட் வீசி, அவர்கள் வாழ்வை சிதைத்த 3 பேரையும், சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் வைத்தே என்கவுண்டர் செய்த விவகாரத்தில், அப்போதே சஜ்ஜனாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், சைபராபாத் ஆணையராக தற்போது பதவி வகித்து வரும் சஜ்ஜனார்தான், பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை இன்று காலை உறுதிப்படுத்தினார். அவருடைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்தான் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து நடித்து காண்பிக்க, இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்ட குற்றவாளிகள், தப்ப முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சு சம்பவம் மற்றும் தற்போதைய பெண் மருத்துவர் சம்பவம் என இரண்டிலும், குற்றவாளிகள், சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. வி.சி.சஜ்ஜனாருக்கு பல்வேறு தரப்பினரும் மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரை, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றே காவலர் வட்டத்தில் அழைக்கின்றனர்.