தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு - புதிய மாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா என்பது பற்றி பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Dec 5 2019 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பிரச்சனை அல்ல என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதே கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பான பணிகளில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.