நேபாள எல்லைக்குட்பட்ட காலாபானி பகுதியிலிருந்து படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும் : நேபாள பிரதமர் வலியுறுத்தல்
Nov 19 2019 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாள எல்லைக்குட்பட்ட காலாபானி பகுதியிலிருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என நேபாள பிரதமர் KP Sharma Oli வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாரதிய ஜனதா அரசு அண்மையில் விலக்கிக்கொண்டது. இதனைதொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டன. இதையடுத்து நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட இடமாகவும், கில்ஜித்-பலுசிஸ்தான் பகுதி லடாக் யூனியன் பிரதேசத்தின் அதிகாரத்திற்குட்பட்ட இடமாகவும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் புதிய வரைபடத்தை, தங்களது எல்லைக்குட்பட்ட காலாபானி பகுதி இந்தியாவின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடமாக காட்டப்பட்டதாக நேபாள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் புதிய வரைபடத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்கள் மட்டுமே துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த வரைபடத்தில் நேபாளத்துடனான எல்லைப்பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நட்பு ரீதியிலான உறவை கொண்டுள்ள நாடுகளுடன் நிலவும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உறுதிப்பூண்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து நேபாளத்தின் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. காலாபானி பகுதியிலிருந்து இந்தியப்படைகள் வெளியேற வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் எல்லைகளை காக்கும் திறன் தனது அரசுக்கு உள்ளதாகவும், இந்தியாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காலாபானி பகுதியை மீட்பதில் நேபாளத்தின் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் நேபாள பிரதமர் KP Sharma Oli அறிவித்துள்ளார்.