இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் கோத்தபய ராஜபக்ச - தோல்வியை ஒப்புக்கொண்டார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா
Nov 17 2019 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையின் 8-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே இத்தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றார். சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வரை அவர் முன்னிலைப் பெற்ற நிலையில், மீண்டும் கோத்தபய ராஜபக்ச முன்னிலைக்கு அடைந்தார். தற்போது கோத்தபயராஜபக்ச 50 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிமுகத்தில் உள்ளார்.
இதனிடையே கோத்தபயராஜபக்சவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். மேலும் கோத்தபய ராஜபக்சவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தோல்வியின் எதிரொலியாக, இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அதிபராகும் கோத்தபயராஜபக்ச வரும் 20ம் தேதி அப்பொறுப்பை ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் வகையில், இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.