மஹாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர திட்டமிட்டிருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், திடீரென அந்த சந்திப்பை ஒத்தி வைத்தன. இதே போல், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத் பவார் இடையே நடைபெறவிருந்த சந்திப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி நீடித்ததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4 முப்பது மணியளவில், ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு 3 கட்சிகளும் திட்டமிட்டிருந்தன. ஆனால், திடீரென அந்த சந்திப்பை 3 கட்சிகளும் ஒத்திவைத்தன.
தேர்தல் செலவின அறிக்கையை தயாரிக்கும் பணியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால், சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே, குறைந்தப்பட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதில் நிலவும் பிரச்னையால்தான், சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போல், டெல்லியில் இன்று, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, சிவசேனா கட்சியுடன் சேர்ந்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணி அரசு அமைப்பது குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத் பவார் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பும், திடீரென நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் அதிரடி திருப்பங்களால், மஹாராஷ்டிர மாநில அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
மாநிலங்களவையில் இதுவரை, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வரிசையில் சிவசேனா எம்.பி.,க்கள் 3 பேருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அவர்களுக்கான இருக்கைகள், எதிர்க்கட்சி வரிசையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.