மூன்றே மாதங்களில் வோடபோன் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருப்பதாக, ஏர்டெல் நிறுவனமும் அறிவிப்பு
Nov 15 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக, ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன.
புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன.
இதையடுத்து ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், அந்நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நடப்பாண்டின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக ஐடியா - வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
இதே போல், முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டதாக, ஏர்டெல் தெரிவித்துள்ளது.