அயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு - நவம்பர் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
Oct 15 2019 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கு விசாரணை, இன்று 39வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில், நாளையுடன் விசாரணை நிறைவு பெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக் குழு மூலம், பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்கை, வார விடுமுறை நாட்களை தவிர தினந்தோறும் நடத்தி வருகிறது. நாளை மறுதினத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய, கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 39-வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. 40-வது நாளான நாளையுடன், விசாரணை நிறைவு பெறும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.