சட்டவிரோத பண பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு - கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் ஜாமின் மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Oct 15 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முறைகேடான பண பறிமாற்ற வழக்கில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மேல்முறையீடு மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முறைகேடான பண பறிமாற்ற வழக்கில், கர்நாடக காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவகுமாரை, அமலாக்கத் துறை அதிகாரிகள், டெல்லியில் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். பின், அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அங்குள்ள திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிவகுமாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும், சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததால், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.
இதனிடையே, சிவகுமாரின் தாய் கவுரம்மா, மனைவி உஷா ஆகியோரது வங்கிக்கணக்கிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம், வேறு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க, இருவரையும் நாளை மறுதினம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.