சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Sep 18 2019 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனுவை நாளை வரை ஒத்தி வைத்து டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத எட்டரை கோடி ரூபாய் பணம் சிக்கியது. இதுகுறித்து திரு.டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப்பின்னர் கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், திரு. டி.கே.சிவக்குமாரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்து, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற காவலை வரும் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டி.கே.சிவக்குமார் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகாததால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.