மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Sep 17 2019 8:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாகவும், இதனால் ஏராளமானோர் வேலை இழந்து வருவதாகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, மோட்டார் வாகன தொழில் பாதிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படும் நிலைமை ஏற்பட்டது. நாட்டின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தின் அனைத்து உற்பத்திக் கூடங்களும் 17 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி, இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், பாரதிய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்கள் இந்த நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருப்பதால், மத்திய அரசு தனது கடமையிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரச்னையை திசை திருப்பும் முயற்சியும் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சியால் மேலும் ஒரு மோட்டார் நிறுவனம் பாதிக்கப்பட்டு, அதன் பணியாளர்களும், தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் திருமதி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.