ராஜஸ்தான் மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், ஜோகிந்தர் சிங் அவானா, தீப் சந்த், ராஜேந்திர சிங் குப்தா, லக்ஹன் சிங், வஜிப் அலி, சந்தீப் குமார் ஆகியோர், ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷியை, அண்மையில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து, கடிதம் வழங்கி உள்ளனர்.
இது குறித்த தெரிவித்த எம்.எல்.ஏ., பகுஜன் ஜோகிந்தர் சிங் அவானா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநிலத்தின் நலனுக்காக சேவையாற்ற உள்ளோம் என்றும், இதனால், அக்கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கி உள்ளோம் என்றும் கூறினார்.
இதையடுத்து, 200 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணியின் பலம், 119 ஆக உயர்ந்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிற கட்சிக்கு தாவியது, மாயாவதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.