பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பல் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Sep 16 2019 9:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், ஐந்து பேர் அடங்கிய கும்பல், வங்கி ஊழியர்களை மிரட்டி, 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் மாவட்டத்தில், மட்ரி இண்டஸ்ட்ரியல் என்ற பகுதியில், பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில், வழக்கம்போல் வங்கி ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென வந்த ஐந்து பேர் அடங்கிய கும்பல், துப்பாக்கிகளை காட்டி மிரட்டி, வங்கியிலிருந்த 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வங்கியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்வையிட்டனர். அதில், ஒரேயொரு நபர் மட்டும் முகத்தை துணியால் மூடியுள்ளார். மற்றவர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகி உள்ளன. சி.சி.டி.வி.யில் கொள்ளையர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகி உள்ளதாக தெரிவித்த உதய்ப்பூர் போலீசார், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றும் கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.