விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது என பட்ஜெட்டில் தகவல் - ரயில்வே துறையில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்- வருமானவரித் தாக்கலுக்கு ஆதார் அட்டையையும் பயன்படுத்தலாம்- போன்ற பல்வேறு அம்சங்கள் அறிவிப்பு
Jul 5 2019 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே பயண அட்டை அறிமுகம்- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சுமார் 2 மணிநேரம் அதனை வாசித்தார். அப்போது அவர் உறுப்பினர்களின் கரவொலிகளுக்கு மத்தியில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் சக்தியாக இந்தியா விளங்குகிறது என்றும், காப்பீட்டு துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், ரயில்வே துறையில் தனியார் முதலீடு ஏற்படுத்தப்படும் என்றும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்புப்போது அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும், வருமானவரி தாக்கலுக்கு ஆதாரையும் பயன்படுத்தலாம் என்றும் பட்ஜெட்டில் அறிவித்தார்.
மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும்- அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் நோக்கம்- விமான போக்குவரத்து துறையில் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்- உள்ளூர் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை- கங்கையில் சரக்கு போக்குவரத்து அடுத்த 4 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்த்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
வருடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளும் 3 கோடி வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம்- வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலீடு செய்யும் முறையில் மாற்றம்- செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக செலுத்த புதிய நிறுவனம் போன்றவை குறித்தும் நிதியமைச்சர் எடுத்துரைத்தார்.
ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 25 சதவீத வரி செலுத்த வேண்டும்-
வங்கிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிப்பு-
நேரடி வரிவருவாய் 11 புள்ளி மூன்று ஏழு லட்சம் கோடியாக அதிகரிப்பு- தனிநபர் வருமான வரி வரம்பு 5 லட்சமாக நீட்டிப்பு- நாட்டின் தொழில் கடன் விநியோகம் 13 புள்ளி 8 சதவீதம் அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொருவருக்கும் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்- மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்- சாமான்ய மனிதரின் வாழ்க்கையை முத்ரா கடன் திட்டம் மாற்றியது- மின்துறைக்கு விரைவில் சிறப்பு நிதி ஒதுக்கீடு-
சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள் அறிமுகம்-
கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரிய தொழில்களை மறுசீரமைப்பு செய்ய மையங்கள் உருவாக்குதல்- ரயில் பேருந்துகளில் நாடு முழுவதும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை வழங்குதல் போன்றவை குறித்தும் திருமதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.