கொல்கத்தாவில் அமித்ஷா பிரச்சாரத்திற்கு மீண்டும் தடை விதித்தது மேற்குவங்க அரசு - ஹெலிகாப்டர் இறங்குவதற்கும் அனுமதி மறுப்பு
May 13 2019 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவின் ஜாதவ்பூரில், பா.ஜ.க. தலைவர் திரு. அமித்ஷா தலைமையில் நடைபெற இருந்த பேரணிக்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மம்தா அரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, ஜாதவ்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திரு. அமித்ஷா தலைமையில் பேரணி நடத்த, பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. இதற்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதேபோல் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜ.க.வினர், செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக, தேர்தல் ஆணையத்தின் உதவியைநாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.