பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இன்று ஒப்படைப்பு - வாகா எல்லையில் வரவேற்க குடும்பத்தினர் விரைந்தனர்
Mar 1 2019 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன், வாகா எல்லையில், செஞ்சிலுவை சங்கத்தினரால் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் வாகனங்கள் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாத இயக்கத் தீவிரவாதி, பெருமளவு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதச் செய்து கொடூரத் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்புப் படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இந்திய ராணுவ தளங்களை தாக்க போர் விமானங்களை அனுப்பியிருந்தது. அவற்றை இந்திய விமானப்படை இடைமறித்து விரட்டியடித்தது. இதில், பாகிஸ்தானின் F16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்ட விமானி அபிநந்தன் இயக்கிய மிக் 21 ரக போர் விமானம், விழுந்து நொறுங்கியது. அதிலிருந்து பாராசூட் மூலம் வெளியேறிய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்கியபோது, அந்நாட்டு ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, அபிநந்தனை இன்று விடுதலை செய்வதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அபிநந்தனை விடுதலை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். வாகா எல்லையில், செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் அபிநந்தன் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
அபிநந்தன் விடுதலையால் மகிழ்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து, வாஹா எல்லைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.