ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு - தேசிய பசுமை தீர்பாய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் மூறையீட்டு வழக்கில் தீர்ப்பு
Feb 19 2019 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஆலையை திறக்க மீண்டும் தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக, ஆலை மூடப்பட்டது. ஆலையினை திறக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் ஆலையினை திறக்க அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்த, நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, ஆலையை திறக்கவும் தடை விதித்தது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.