புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய அப்துல் ரஷீத் காஜி உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை
Feb 19 2019 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புல்வாமாவில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச் சண்டையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷீத் காஜி உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள Pinglan பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிசண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் வீரர்கள் ராணுவ தளபதி மற்றும் வீரர்கள் 3 பேர் உள்ளிட்ட நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிசண்டை நீடித்து வருவதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ராணுவத்தினர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிசண்டையில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷீத் காஜி உள்ளிட்ட தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குஜராத் மாநில எல்லைப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென அத்துமீறியதால் அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச்-ல் இருந்து - ராவலகோட் இடையே இயக்கப்படும் எல்லை தாண்டிய பேருந்து சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.