மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலை நிறுத்தப்போராட்டத்தால் நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் அகில இந்திய ஆளவில் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
விலைவாசி உயர்வு,பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும், பொதுத்துறைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது, மின்சார சட்ட மசோதா 2018ஐ ரத்து செய்ய வேண்டும்,உள்ளிட்ட 12 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ,வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள்,பொதுதுறை தொழிலாளர்கள், தனியார்துறை தொழிலாளர்கள்,விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார சட்ட திருத்த மசோதா 2018 ஐ கைவிட வேண்டும், மின்சார கட்டணம் உயர இருப்பதை தடுத்திட வேண்டும், மின்துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும், மின் விநியோகத்தை தனியாரிடம் கொடுப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாறையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் SBI வங்கியில் தொடங்கிய தொழிலாளர் பேரணி பாலக்கரை, புதிய பேருந்து நிலையம் வழியாக நகராட்சி திடலில் முடிவடைந்து. இப்பேரணியில் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள், கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டு சென்றனர்.
திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலைதிட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணாசிலை அருகே மத்திய அரசினை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
வேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன தொழிலார்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ,சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக மாதம் 18ஆயிரம் என நிர்ணயிக்க வலியுறுத்தியும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், , மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் பீடித்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 50 பேரை பாவூர்சத்திம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.