முன்னாள் சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Jan 8 2019 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சி.பி.ஐ. இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சி.பி.ஐ., இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர்.
இந்த மோதல் உச்ச கட்டத்தை அடைந்ததை அடுத்து, மத்திய அரசு, இருவரையும் விடுப்பில் அனுப்பியது. பின்னர் சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக, இணை இயக்குனர் நாகேஸ்வர ராவை, மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அலோக் குமார் வர்மா வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று விடுமுறையில் சென்றதால், வழக்கின் தீர்ப்பை, நீதிபதி திரு.சஞ்சய் கிஷண் கவுல் வாசித்தார். அதில், சி.பி.ஐ. இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், அந்த உத்தரவு செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தார். அலோக்வர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கிய தேர்வுக்குழுவை அணுகி, அதுகுறித்து கருத்து கேட்டிருக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சி.பி.ஐ., இயக்குனர் அலோக் குமார் வர்மாவின் பதவிக் காலம், வரும் 31ம் தேதியுடன் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.