காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் தீவிரம் - ராஜஸ்தான், சத்தீஷ்கரில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Dec 12 2018 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களின் புதிய முதல்வர்களை தேர்ந்தெடுக்க, இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று, புதிய முதல்வர்களை தேர்வு செய்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், 2 முறை முதலமைச்சராக பதவி வகித்த திரு. அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. சச்சின் பைலைட் ஆகிய இருவரும் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளனர். இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைமையிடப் பார்வையாளர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில், இந்த இருவரில் யாரை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்ற இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி எடுப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இன்றைய கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், சத்தீஷ்கர் மாநிலத்திலும் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தலைநகர் ராய்ப்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர் திரு. மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று, புதிய முதல்வரைத் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தம்ராத் வாஜ் சாஹு, மாநில காங்கிரஸ் தலைவர் புபேஷ் பெஹல் உள்ளிட்ட 4 பேர் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர்.