ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்
Sep 24 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, 'இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் 'டஸ்ஸால்ட்' ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை தனது ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்றும், இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, ரஃபேல் விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.