வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் : அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Sep 17 2018 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள, 1-வது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட், நேற்றிரவு 10 மணி 8 நிமிடங்களில் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன.
நோவாசர் செயற்கைகோள், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
நோவாசர், 445 கிலோவும், எஸ்1-4, 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில், இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் 17 நிமிடம் 45 வினாடிகளில், நிலை நிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் திரு.சிவன், அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.