கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு- பேராயர் ஃபிராங்கோவிற்கு விசாரணை குழு சம்மன்
Sep 12 2018 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆளான பேராயர், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலய பேராயர் ஃபிரான்கோ மூலக்கல், தன்னை 13 முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக கேரள கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார். ஆனால், தம் மீதான புகார் அபாண்டமானது என பேராயர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரி, வாடிகனில் உள்ள போப் முதலாம் ஃபிரான்சிசுக்கு 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதியுள்ளார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் தான் பாலியல் கொடுமையை அனுபவித்து வருவதாகவும், அச்சமும், அவமானமும் இருந்ததால் வெளியே கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பேராயர் மூலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயல்கிறார் என்றும் அக்கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதியிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேராயர் மூலக்கல் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், அவருக்கு விசாரணைக் குழு இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் எட்டுமன்னூர் பகுதியில் வைத்து பேராயரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.