கேரளாவில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு - உடனடி நிவாரணப் பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிப்பு -
Aug 13 2018 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். மேலும் 100 கோடி ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். துண்டிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தியும், சாலைகளை சீரமைத்தும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மிகவும் மிகவும் மோசமான பகுதிகளில் சிக்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, மருந்துகள் வழங்கும் பணிகளையும் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மற்றும் மலப்புரம் பகுதிகளில் 24 மணி நேரமும் ஓய்வின்றி 40 குழுக்களாக பிரிந்து ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினருடன் இணைந்து பேரிடர் மீட்புக்குழுவினரும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், எட்டு மாவட்டங்களும் தொடர்ந்து ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 53 ஆயிரத்து 500 பேர் வீடுகளை இழந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், நேற்று கேரளாவுக்கு சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் ஆகியோருடன் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய திரு. ராஜ்நாத்சிங், வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.