நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் - வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க. அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக தெலுங்குதேசம், பிஜு ஜனதாதள கட்சிகள் குற்றச்சாட்டு
Jul 20 2018 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தின் முந்தைய குளிர்க்கால கூட்டத் தொடரில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், அவையில் தொடர்ந்து போராட்டங்கள் நிலவியதால், நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவை தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை கொடுத்தார். இதேபோல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை அளித்தனர். இதையடுத்து இன்று காலை மக்களவை கூடியதும் அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயதேவ் கல்லா இந்த தீர்மானத்தை முன்மொழிந்து விவாதம் நடத்தினார். 5 கோடி ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க. அரசு மோசடி செய்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதனால்தான் மத்தியஅரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும் மாநிலங்கள் பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசை விமர்சித்தார்.
இதேபோல், பிஜு ஜனதாதள கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அக்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், சிவசேனா கட்சியும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்குப் பிறகு மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.