டீசல் விலையை குறைக்க வேண்டும்,சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் உள்ளிட்டவைகளையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நள்ளிரவு முதல் தொடங்கியது. லட்சக்கணக்கான லாரிகள் இயங்காது என்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் கெடுபிடிகள் ஆகியவற்றைக் கண்டித்து, இன்று முதல், அகில இந்திய அளவில், லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நள்ளிரவு 12 மணிமுதல், நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் லாரிகள் ஓடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்களின் போக்குவரத்து தடைபடும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பால், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் சுமார் 25 ஆயிரம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகரில், ஆங்காங்கே வேலை நிறுத்தம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள், முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபடுவதுடன், நாமக்கல் மாவட்டத்துக்கு வரும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களும் தடைபடும்.
திருச்சி மாவட்டத்தில், 5 ஆயிரம் லாரிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் திருச்சி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், 4 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக, லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் அறிவித்துள்ளன.
லாரிகள் வேலை நிறுத்தம் கரணமாக, தூத்துக்குடி துறைமுகங்கள் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.