எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை ஏற்றார் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் - நாடாளமன்றத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் தீர்மானம் மீது விவாதம்
Jul 18 2018 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளே, எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை, மக்களவை சபாநாயகர் திருமதி. சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதனால், இன்னும் ஒரு சில தினங்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மத்திய அரசு எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் முழுமையாக முடங்கிய நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை மொத்தம் 18 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திரு. மோடி, முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் என்பதால், அவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றம் கூடியதையடுத்து, புதிய உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சியினர், ஆந்திர மாநிலத்துக்கு தனி மாநில அந்துஸ்து கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவையும் இது குறித்து கூச்சலிட்டதால், அவைநண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை, மக்களவை சபாநாயகர் திருமதி. சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதனால், இன்னும் ஒரு சில தினங்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மத்திய அரசு எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதம் என்று நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும் என்று திருமதி. சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.