நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம் : மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை
Jul 12 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தை கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின்போது, தமிழில் அமைந்த வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால், அவற்றுக்கு கருணை மதிப்பெண் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.கே. ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 49 கேள்விகளுக்கும் மொத்தம் 196 கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக திரு. டி.கே. ரங்கராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.