12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை - அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Apr 21 2018 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜம்மு- காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்வோருக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் வகையில் 'போக்சோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்தியஅமைச்சரவையின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட சரத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், சிறுமிகள் பலாத்காரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு வழி செய்யும் வகையில் 'போக்சோ' சட்டத்தை திருத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் 16 வயத்துக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான ஏற்கனவே இருந்த குறைந்த பட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டம், குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.