நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை - மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Apr 19 2018 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதலமைச்சராக கடந்த 2005-ம் ஆண்டு திரு. மோடி இருந்தபோது, உள்துறை அமைச்சராக, தற்போதைய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பதவி வகித்தார். அப்போது, போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் தீவிரவாதிகள் என என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இது போலி என்கவுன்டர் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
குஜராத்தில் விசாரணை நேர்மையாக நடைபெறாது என குற்றம் சாட்டப் பட்டதால், இந்த வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனை மஹாராஷ்ட்ர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா விசாரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி லோயா, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், இறப்பில் மர்மம் இருப்பதாக லோயாவின் சகோதரி சந்தேகம் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஹாராஷ்ட்ர அரசு, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அரசியல் உள்நோக்கத்தோடு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகக் கூறியது. மேலும், நீதிபதி லோயா இயற்கையாகவே மரணமடைந்துள்ளார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் பிரசில் மொழியில் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.